கரூர்: சொத்துப்பிரச்சினையில் தாயை கொல்ல முயன்ற மகனுக்கு 7 ஆண்டு சிறை
கரூர்: சொத்துக்களை எழுதிவைக்க மறுத்த தாயை கொலை செய்ய முயன்ற மகனுக்கு கரூர் மகிளா நீதிமன்றம் 7ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கஸ்தூரி குரும்பம்பட்டியை சேர்ந்தவர் குமாரசாமி கவுண்டர். இவரது மனைவி மாரியாயி. இவர்களுக்கு செல்வராஜ் ( வயது 43) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குமரசாமியும், அவரது மனைவியும் தங்களின் சொத்துக்களை மகளின் பெயருக்கு எழுதிவைக்க முயற்சி செய்தனர்.
இதையறிந்த செல்வராஜ், தனது தாயார்தான் இதற்கு காரணம் என்று நினைத்து அவரை கொல்ல நினைத்தார். தனது இரு சக்கர வாகனத்தில் தாய் மாரியாயியை அழைத்துக்கொண்டு கடவூர் சென்றார். செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் தாயை அடித்து கொல்ல முயன்றார்.
மகனிடம் இருந்து தப்பிய மாரியாயி, அவரிடம் இருந்து தப்பித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கூறினார். இந்த வழக்கு கரூர், மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தாயை கொலை செய்ய முயன்ற மகன் செல்வராஜூக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்தும் கரூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார்.