கச்சத் தீவு அந்தோணியார் கோயில் விழா நிறைவு.. ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் நேற்று காலை சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இந்தியா-இலங்கை ஆகிய இருநாட்டு மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா, நேற்றுமுன்தினம் தொடங்கியது. இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட பேராயர் சவுந்திரநாயகம், கச்சத்தீவு ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
முன்னதாக இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்பதற்காக 4 ஆயிரத்து 336 பேர், தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். நேற்று அதிகாலையில் இருந்தே கச்சத்தீவு செல்ல ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் தமிழக பக்தர்கள் திரண்டு வந்தனர்.

கச்சத்தீவு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு வருவாய்த்துறையின் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கச்சத்தீவு செல்லும் ஒவ்வொருவருக்கும் லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து சோதனைச் சாவடிகளில் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு 112 விசைப் படகுகளில் 4 ஆயிரத்து 3 பயணிகள் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.
கச்சத்தீவு சென்ற தமிழக பக்தர்களுக்கு இந்தியா-இலங்கை நாடுகளின் கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
முதல் நாளான நேற்றுமுன்தினம் மாலை கொடியேற்றம் முடிந்த பிறகு கச்சத்தீவு ஆலயத்தை சுற்றி 12க்கும் மேற்பட்ட இடங்களில் இருநாட்டு பங்கு தந்தையர்கள் மற்றும் இருநாட்டு மக்கள் கலந்து கொள்ளும் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை நடந்தது.
இரவு 8 மணி அளவில் புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேரை இருநாட்டு மக்களும் சேர்ந்து தோளில் தூக்கியபடி தேர்பவனியாக ஆலயத்தை சுற்றி வந்தனர். இரவில் இருநாட்டு மக்களும் ஒருவரையொருவர் சந்தித்துப்பேசி உறவுமுறைகளை பரிமாறி கொண்டனர்.
விழாவின் 2வது நாளான நேற்று (ஞாயிறு) காலை சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. இதில் இருநாடுகளை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. அதன் பின்னர் இருநாட்டு மக்களும் படகுகளில் அவரவர் நாடுகளுக்கு புறப்பட்டனர்.












Click it and Unblock the Notifications