7 கிலோமீட்டர் நடை… 4 மணிநேரம் பேருந்து பயணம் செய்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
ஈரோடு: வாக்குப்பதிவு நாளன்று கத்திரிமலை மக்கள் 88 கி.மீ தூரம் பயணம் செய்து வாக்களித்து ஜனநாயகக்கடமையாற்றியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் உள்ளது கத்திரிமலை. அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த இந்த மலைவாழ் மக்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வருவாய் கிராமத்தில் இந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் இருந்தாலும், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கோவிந்தபாடி வழியாகத்தான் இந்த ஊர் மக்கள் வெளியுலக தொடர்பு வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரிலிருந்து கத்திரிமலை அடிவாரத்தில் உள்ள கத்திரிப்பட்டி என்ற ஊருக்கு தனியாக நகரப்பெருந்தும் இயக்கப்படுகிறது. மற்ற எல்லா தொடர்புகளும் சேலம் மாவட்டத்துடன் இருந்தாலும், இவர்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடி பர்கூரை அடுத்துள்ள துருசனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.
கத்திரிமலை வாக்காளர்கள் தங்கள் கிராமத்திலிருந்து அடர்ந்த மலைப்பாதை வழியாக வாக்குச்சாவடிக்கு சோளகரனை வழியாக நடந்து சுமார் 20 கி.மி தூரம் செல்ல வேண்டும்.
இல்லையெனில், செங்குத்தான மலைப் பாதையில் நான்கு கிலோ மீட்டர் தூரம் இறங்கி, சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பெரியதண்டா லக்கம்பட்டிக்கு வந்து அங்கிருந்து கொளத்தூர், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், அந்தியூர் வழியாக பர்கூரை அடுத்த துருசனம்பாளையம் செல்ல வேண்டும்.
வாக்களிப்பதைக் காட்டிலும், வாக்குப்பதிவு மையத்துக்குச் செல்வது இக்கிராம மக்களுக்கு மிகச் சிரமமான காரியம். இதனால், இந்த கிராம மக்கள் பெரும்பாலும் வாக்களிக்கவே செல்லமாட்டார்கள்.
இதனையறிந்த, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மதுமதி, கத்திரிமலை மக்கள் வாக்களிக்க ஏதுவாக பேருந்து ஏற்பாடு செய்துகொடுக்க அதிகரிகளுக்கு சிறப்பு அனுமதி கொடுத்தார்.
அதன்படி, கத்திரிமலை அடிவாரமான லக்கம்பட்டிக்கு சென்று அங்கிருந்த வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்தில் 72 பேர் பயணம் செய்து துருசனம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பலர் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் மலைப்பாதையில் இறங்கவோ, ஏறவோ இவர்களால் முடியாது. இதனால், நடக்கும் திறனுடைய வாக்காளர்கள் 72 பேர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். இதற்கு முன்னதாகவே, கத்திரிமலையிலிருந்து பர்கூரில் உள்ள தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு துருசனம்பாளையம் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் 30 பேர் அங்கே தங்களது ஜனநாயக கடமையான வாக்கைச் செலுத்தினர்.
தங்களின் வாழ் விடத்திலிருந்து, 7 கி.மீ. தொலைவு கீழே இறங்கி, 4 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியுள்ளனர் கத்திரிமலை மக்கள். இந்த மக்கள் தாங்கள் வாக்களிக்க வந்து சென்ற மொத்த தொலைவு 88 கி.மீ ஆகும்.
சல்யூட்!












Click it and Unblock the Notifications