பொன்னார், தமிழிசையைப் பார்த்து கேரளா நம்பூதிதிரிகள் அதிர்ச்சி - திருநாவுக்கரசர் கிண்டல்
பாஜக தமிழக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்னாரைப் பார்த்து கேரளா நம்பூதிரிகளே அதிர்ச்சியடைகின்றனர் என்று திருநாவுக்கரசர் கிண்டலடித்துள்ளார்.
சென்னை: தமிழிசை சவுந்தரராஜனும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சொல்லும் ஜோசியம் உடனே பலிப்பதால் அதைப் பார்த்து கேரள நம்பூதிரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர் கிண்டலடித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசினார். பாஜகவை கடுமையாக சாடினார்.

வெற்றிக்கூட்டம் மாறிவிட்டது
இந்த இடத்தில் தி.மு.க. வெற்றிக் கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அந்த வெற்றி தேர்தல் ஆணையத்தின் மூலம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. எப்போது தேர்தல் வைத்தாலும், தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி அடையும்.

நிரந்தர ஆளுநர்
தமிழகம் மிகப் பெரிய மாநிலம். அதற்கு ஒரு நிரந்தர ஆளுநரை நியமிக்க, மத்திய அரசுக்கு துப்பில்லை. தி.மு.க சார்பில் மும்பை சென்றுதான், கவர்னரைப் பார்த்து புகார் மனு கொடுத்திருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகி இருக்கலாம் என நினைக்கிறேன். மூன்று பேர் போய் வரவே இவ்வளவு செலவு ஆகிறது என்றால், சாதாரண மக்களால் மும்பை சென்று கவர்னரைப் பார்த்து வர முடியுமா? இதற்கெல்லாம் அக்கறை எடுக்காமல், இடைத்தேர்லை நிறுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பாஜக முயற்சி
தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக வந்து பாஜக காலூன்ற முயற்சித்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர்கள் பன்னீர்செல்வம், தீபா மூலம் வெற்றி பெற நினைத்தனர். ஆனால், அதற்குள் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது. பாஜகவினர் நினைப்பது தமிழகத்தில் ஒரு போதும் நடக்காது.

பெரிய ஜோக்
பாஜக வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதே மிகப்பெரிய ஜோக். ஆனால், அவர்கள் நினைப்பது எல்லாம் தமிழகத்தில் நடக்கிறது. அதுதான் ஆச்சரியம். அதிமுகவை இல்லாமல் ஆக்குவோம் என்றார்கள். அப்படி செய்து விட்டார்கள். கட்சியை இரண்டாக உடைத்து விட்டார்கள் என்றார்.

கேரளா நம்பூதிரிகள்
இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்றார்கள். இடைத்தேர்தலை ரத்தாகும் என்றார்கள் அதுவும் நடந்து விட்டது. இப்படி தமிழிசையும், பொன்னாரும், நடக்கப் போவதை முன் கூட்டியே சொன்னார்கள். இப்படி இவர்கள் சொல்வது எல்லாம் பலித்து விடுவதால் பொன்னார், தமிழிசையைப் பார்த்து ஜோதிடர்கள், கேரள நம்பூதிரிகள் எல்லோரும் தங்கள் தொழிலுக்கு போட்டி வந்துவிட்டதாக பயந்துபோயிருக்கிறார்கள் என்று திருநாவுக்கரசர் நக்கலாக கூற கைத்தட்டலும் விசிலும் பறந்தது.

பாஜகவே காரணம்
அதிமுகவை உடைத்து, சின்னத்தை முடக்கியதோடு ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்ததும் பாஜக தான் என்று குற்றம் சாட்டிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்கிற பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications