நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம்: குஷ்பு
சென்னை: ரூ500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர அதிரடியாக ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பும், அதே நேரம் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மோடியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருப்பது கருப்பு பணம் என்றும், அதனை வேறோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
'இந்த திட்டத்தினை 4 மாதங்களாக மிகவும் ரகசியமாக செய்து வந்ததற்காக முதலில் பிரதமர் மோடியை பாராட்டியே ஆக வேண்டும்','இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் கருப்பு பணம் வைத்திருக்கும் பலரும் கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருப்பர், ஏனெனில் அப்பணம் இப்போதைக்கு வெற்றுக் காகிதம் ஆகியிருக்கும் என்றும், பலரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த அப்பணத்தை அழுதபடியே கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பர்' என்று கூறியுள்ளார்.
இருப்பினும் தினக்கூலியாக வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர், அவர்கள் தங்களது அன்றாட தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications