ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு போட்டியா?
சென்னை: சட்டசபை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்து அவர் தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

அவர் மாநிலத்தில் உள்ள 15 நகரங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு போட்டியிடப் போவதாக செவ்வாய்க்கிழமை அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது.
திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு அது 173 தொகுதிகளில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது. அதில் ஆர்.கே. நகர் தொகுதி திமுகவிடம் உள்ளது. ஆனால் அந்த தொகுதியை திமுக காங்கிரஸுக்கு அளிக்க உள்ளதாகவும், அங்கு ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு போட்டியிடப் போவதாகவும் பேச்சு கிளம்பியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று அண்மையில் குஷ்பு தெரிவித்தார். அவர் தனது முடிவை தெரிவித்த பிறகே அவரை தேர்தல் களத்தில் இறக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டியல் வெளியானால் ஆர்.கே. நகர் தொகுதியை அது வைத்துக் கொண்டதா இல்லை காங்கிரஸுக்கு அளிக்கிறதா என்பது தெரியும். ஆர்.கே. நகர் தொகுதி காங்கிரஸுக்கு அளிக்கப்பட்டால் அங்கு குஷ்பு தான் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications