மதுரையில் பரபரப்பு.. பணம் கேட்டு கடத்தப்பட்ட மாணவனை துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்ட போலீஸ்
இப்போதெல்லாம் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை கடத்திச் சென்று பணம் கேட்டுப் பறிக்கும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன.
இந்த நிலையில் மதுரையில் ஒரு 9ம் வகுப்பு மாணவனை கடத்திச் சென்றது ஒரு கும்பல். பணம் கேட்டு மிரட்டிய கும்பலிடமிருந்து மாணவனை பத்திரமாக மீட்டுள்ளனர் காவல்துறையினர்.
மகாத்மா மெட்ரிக் பள்ளியில் ரவிக்குமார் என்பவரது 14 வயது மகன் கிரண்குமார் ரோஹித் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவனை 5 மணி அளவில் ஒரு கும்பல் காரில் கடத்தியுள்ளது.
அதன் பின்னர் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமாரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து ரவிக்குமார் போலீஸில் புகார் கொடுத்தார்.
உஷாரான போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். எந்த போனிலிருந்து மிரட்டல் வந்தது என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்து வாகன சோதனையை முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் ரவிக்குமாருக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர், அறந்தாங்கியில் பணத்தை கொடுத்து மாணவனை மீட்டுக்கொள்ளுமாறு கூறினான். இந்த நிலையில் மதுரையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில், கீரனூர் பகுதியில் ஒரு இன்னோவா கார் படு வேகமாக வந்ததைப் பார்த்த வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அதைத் தடுக்க முயன்றனர். ஆனால் அந்தக் காரை ஓட்டி வந்த நபர் சடாரென்று திரும்பி போக ஆரம்பித்தார்.
இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் அந்தக் காரை விரட்டினர். குளத்தூர் என்ற இடத்தில் வைத்து காரை மடக்கி நிறுத்தினர். காருக்குள் பார்த்தபோது கடத்தப்பட்ட மாணவன் அதில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தல் கும்பல் தப்ப முயன்றது. ஆனால் போலீஸார் ஓடாதீர்கள் என எச்சரித்தன்.
அப்படியும் அவர்கள் ஓட முயலவே, போலீஸார் அதிரடியாக துப்பாக்கிச் சூட்டில் குதித்தனர். இதில் கார் டிரைவர் காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தல்காரர்களைப் பிடித்த போலீஸார் அவர்களை திருச்சி கொண்டு சென்றுள்ளனர். அவர்களிடம் திருச்சி சரக டிஐஜி அமல்ராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.
மாணவன் கடத்தப்பட்ட 4 மணி நேரத்திலேயே அவனை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.