மேட்டூர் பஸ்ஸ்டாண்டில் போதையில் உருண்ட தந்தை: பசியில் கதறிய குழந்தைகள்
மேட்டூர்: மேட்டூர் பேருந்து நிலையத்தில், லாரி ஓட்டுனர், ஒருவர் குழந்தைகளை பசியால் தவிக்க விட்டு விட்டு குடிபோதையில் உருண்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தையின் நிலையை பார்த்தும், பசி வயிற்றைக் கிள்ள குழந்தைகள் இருவரும் கதறித் துடித்ததைப் பார்த்து பொதுமக்களை வேதனைப்பட்டனர்.
குடிகார தந்தையின் பெயர் முருகன், 30. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, பண்ணவாடி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த இவர் லாரி ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தம்பதியருக்கு, தனஸ்ரீ, 4 என்ற மகளும், அழகிரி, 2, என்ற மகனும் உள்ளனர்.
முருகன் தினசரி, மது அருந்திவிட்டு, மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.இதனால், சில நாட்களுக்கு முன், கவிதா வீட்டில் கோபித்துக்கொண்டு, பவானி அடுத்த சுண்டாட்டம்பாளையத்திலுள்ள, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், முருகன், தன் குழந்தைகளை மட்டும் அழைத்து, தன் வீட்டுக்கு வந்தார்.
ஆடிப்பெருக்கு பண்டிகை முடிந்த நிலையில், இரு குழந்தைகளையும், மனைவியிடம் விட முடிவு செய்த முருகன், மனைவி ஊருக்கு செல்ல தன் குழந்தைகளுடன், பேருந்தில் மேட்டூர் வந்தார். அப்போதும் போதையில் இருந்த முருகன், தடுமாறிய நிலையிலேயே பேருந்தில் இருந்து இறங்கினார். கீழே தடுமாறி விழுந்து உருண்டு புரண்ட அவர் சிறிது நேரத்தில் போதையில் மயங்கிவிட்டார். பிஞ்சு குழந்தைகள்தான் பாவம் செய்வதறியாது தவித்தனர், பசியால் கதறி துடித்தனர்.
குழந்தைகள், பசியால் கண்ணீர் விட்டு அழுதது பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மனதை கரைய செய்வதாக இருந்தது. பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிலர், முருகன் தலையில் தண்ணீரை ஊற்றி போதையை தெளிய வைத்தனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் மயக்கம் தெளிந்தது. அவரை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் பசியை போக்கி, இருவரையும் மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த உறவினர்கள், இரண்டு மணி நேரத்துக்கு பின் வந்து, காவல் நிலையத்திற்கு வந்து முருகனையும், குழந்தைகளையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.