பள்ளிக்கு லேட்டாய் வந்த 7 ஆசிரியர்கள் – நோட்டீஸ் கொடுத்த பள்ளிக் கல்வி இயக்குனர்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளிக்குத் தாமதமாக வந்த 7 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பள்ளிக் கல்வித்துறையினால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க சென்னையிலிருந்து வந்த பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், அதிரடியாக கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 7 ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளிக்குத் தாமதமாக வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்படி தாமதமாக வந்த 7 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி நோட்டீஸ் வழங்கினார். இதையடுத்து காலதாமதமாக வந்த ஆசிரிய, ஆசிரியைகள் அதற்கான விளக்கக் கடிதம் எழுதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கினர். இவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.