கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நிச்சயம் தொடங்கும்- அடித்து சொல்கிறார் அமைச்சர் மாஃபா
கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடரும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை: கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தொடரும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடி அருகே அமைந்துள்ள பள்ளிச் சந்தை திடலில் இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டன. கீழடியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இவை கடந்த 30-ஆம் தேதி முடிவடைந்தன.
எனினும் அங்கிருந்து தொல்லியல் தொடர்பான பொருள்கள் ஏதும் கிடைக்கவில்லை. கீழடியில் 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கீழடியில் மூன்றாவது கட்ட ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் கீழடியில் 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மத்திய அரசின் இணைந்து தொடரும். அகழ்வாய்வு செய்யும் இடங்கள் எதுவும் ஒப்படைக்கும் பணிகள் நடைபெறவில்லை. கீழடி அகழாய்வு பணிகளை மறைப்பதாக நச்சு கருத்துகள் பரப்பப்படுகின்றன என்றார் அமைச்சர்.