ஜெ.சேலை கிழிப்பு, ஸ்டாலின் சட்டை கிழிப்பு- இருசம்பவங்களிலும் உடனிருந்த ஒரே சாட்சி இவர்!
ஜெயலலிதா சேலை கிழிப்பு, ஸ்டாலின் சட்டை கிழிப்பு ஆகிய இரு சம்பவங்களிலும் இருவருக்கும் உடன் இருந்த ஒரே சாட்சி கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன்.
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்ட போதும் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டபோதும் இரு சம்பவங்களிலும் இருவருக்கும் உடன் இருந்த ஒரே சாட்சி கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன்.
1989-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சட்டசபை களேபரமானது.
இதில் தாம் தாக்கப்பட்டதாக கூறி தலைவிரி கோலமாக கிழிந்த சேலையுடன் ஜெயலலிதா சட்டசபையை விட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ். ராமச்சந்திரன்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
28 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் பாத்திரங்கள் மட்டும் மாற அதேபோன்ற களேபர காட்சி நேற்று அரங்கேறியது. எடப்பாடி பழனிச்சாமி தமது அரசின் மீது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை நேற்று சட்டசபையில் முன்மொழிந்தார்.

ஸ்டாலின் சட்டை கிழிப்பு
அப்போது, ரகசிய வாக்கெடுப்புதான் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் வலியுறுத்த அமளிதுமளியானது. இந்த அமளிதுமளியின் முடிவில் தாம் தாக்கப்பட்டதாக கிழிந்த சட்டையுடன் சட்டசபையை விட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஸ்டாலின்.

கேகேஎஸ்எஸ்ஆர்
அப்போது ஸ்டாலினுடன் துணையாக இருந்தவரும் அதே முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன்தான். அன்று ஜெயலலிதா பக்கம் இருந்த கேகேஎஸ்எஸ்ஆர் இன்று ஸ்டாலின் பக்கத்தில் இருக்கிறார்.

துரைமுருகன்
இந்த இரு சம்பவங்களுக்கும் இன்னுமொரு சாட்சியாக இருப்பவர் திமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அன்று ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தவர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளானவர் துரைமுருகன். இன்று சட்டை கிழிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு பாதுகாவலராக இருந்தவரும் துரைமுருகன்.
என்னே ஒற்றுமைகள்!












Click it and Unblock the Notifications