"ஸ்மார்ட் சிட்டி"யாகிறது சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம்..
சென்னை: மத்திய அரசு நாடு முழுவதும் 100 நகரங்களைத் தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டியாக்க உள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோடி தலைமையிலான அரசின் முதலாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நாடு முழுவதும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஸ்மார்ட் சிட்டிகளாக முழுமையான வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் தற்போது குஜராத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை நேற்று நாடு முழுவதும் மொத்தம் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்க மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 நகரங்கள் மத்திய அரசால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை
தமிழகத்தின் தலைநகராக இருந்த போதும் பிற மாவட்டத்தினர் நாள்தோறும் பெரும் எண்ணிக்கையில் வந்து குடியேறுகிற நகரம்.. அனைத்துவித கட்டமைப்பு வசதி கொண்ட நகரமாக இருப்பதால் சென்னை மற்றும் புறநகர்களில் தகவல் தொழில்நுட்ப நகரங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் 'குடி' கொண்டிருக்கின்றன. இந்நகரம் மேம்படுத்தப்படும் போது கூடுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

திருச்சி
தமிழகத்தின் 2வது தலைநகராக சொல்லப்படும் நகரம் இது.. ஒரு காலத்தில் தமிழகத்தின் தலைநகராக திருச்சியை மாற்றுவதற்கும் கூட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலத்தின் மையப்பகுதியாக இருப்பதால் இத்தகைய முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இன்னமும் குறிப்பிட்டு சொல்லும்படியான வளர்ச்சியை எட்ட முடியாத ஒரு நகரமாக இருந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டால் சென்னைக்கு இணையான வளர்ச்சியை எட்டவும் வாய்ப்பிருக்கிறது.

மதுரை
தென் தமிழகத்தின் தலைநகராக இருப்பது மதுரை. பழம் பெருமைவாய்ந்த நகராக இருந்தாகவும் கிராமம் சார்ந்த வாழ்வியலுடனே இன்னமும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பன்னாட்டு தொழிற்சாலைகள் எட்டிப்பார்க்காத ஒரு நகரமாக இருந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை சேர்க்கப்படும் போது தென் தமிழகத்துக்கு நம்பிக்கை ஏற்படும்.

கோவை
தென்னிந்தியாவின் மான்செஸ்டராக ஒருகாலத்தில் கோலோச்சிய நகரம்.. தமிழகத்தின் மேற்கு மண்டலத்தின் தலைநகரம்.. சிறுதொழிலகங்கள் நிறைந்த பகுதி. டாலர் சிட்டியான திருப்பூரும் கோவைக்கு அருகே அமைந்துள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிச்சயம் கோவை- திருப்பூருக்கு வரப்பிரசாதமாக அமையும்.

நெல்லை
தமிழகத்தின் தென் எல்லையோர நகரம்.. இன்னமும் பின்தங்கிய பகுதியாக ஜாதிய மோதல்கள் தொடர் கதையாகிற பகுதி. இந்நகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தி தொழிற்சாலைகள், நிறுவனங்கள் கால்பதிக்கும் போதுதான் இதன் மீது படிந்திருக்கும் ரத்தக்கறை அகலும்.

சேலம்..
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று சேலம். மாம்பழ விளைச்சலில் தலைநகராக திகழ்கிறது. கிராமம்சார்ந்த நகரமாக இருந்தாலும் ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படும் போது தொழில்வளர்ச்சி நல்ல நிலையை எட்ட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications