கொடநாடு கொலை: சாமியார் மனோஜை விடிய விடிய தோண்டித் துருவிய போலீஸ்
கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் மனோஜிடம் கோத்தகிரி போலீஸ் விடிய விடிய நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்களை கக்கியதாக தெரிகிறது.
சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் மனோஜிடம் கோத்தகிரியில் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது பல முக்கிய நபர்கள் பற்றி வாக்குமூலத்தில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள்தான் இப்போதைக்கு ஹாட் டாபிக். 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொடநாடு எஸ்டேட் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் மட்டுமே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என்று ஆரம்பம் முதலே போலீசார் கூறி வந்தனர்.
கொடநாடு பங்களாவில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் கொடநாடு பங்களாவிற்குள் மூன்று வாகனங்களில் வந்த 11 பேர் காவலாளியை கொன்று விட்டு பங்களாவில் இருந்த அறைகளை உடைத்து விலை மதிப்பு வாய்ந்த நகைகள், பணம், ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையை தடுக்க முயன்ற ஒரு காவலாளி கொலை செய்யப்பட, மற்றொரு காவலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலும், சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்தும் போலீசார் குற்றவாளிகளை நெருங்கி வருகின்றனர்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில்,11 பேர் ஈடுபட்டனர் என்று கூறும் போலீசார் இதுவரை 9 பேரைக்கைது செய்துள்ளது.மீதி 2 பேரில் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.இன்னொருவர் சாலைவிபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பி,மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

சாமியார் மனோஜ் உடன் தொடர்பு
கார் டிரைவர் கனகராஜ்தான் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக இருந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். அவர் மரணமடைந்து விட்டார்.
கனகராஜ் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் 2012ஆம் ஆண்டு அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டனர்.
சொந்த ஊருக்கு வந்த கனகராஜ், ஒரு கார் வாங்கி அதை ஓட்டி வந்தார். மேலும் கோடநாடு எஸ்டேட்டில் தினக்கூலி அடிப்படையில் அவ்வப்போது கார் டிரைவர் பணிக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை கொள்ளையடிக்க கனகராஜ் திட்டம் தீட்டினார்.
இந்த திட்டத்திற்கு அவரது நண்பர் கோவையைச் சேர்ந்த சயன் உதவியை நாடினார்.

சாமியார் மனோஜ்
கோவை ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றில் வேலைபார்த்த சயன் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்தான் கூலிப்படையை திரட்ட மனோஜ் என்ற சாமியாரை நாடினார். சாமியார் மனோஜின் ஏற்பாட்டின் பேரில், ஹவாலா பண மோசடி கும்பலைச் சேர்ந்த கூலிப்படையை அமைத்து கொலை, கொள்ளையை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

மனோஜ் யார்?
கேரள மாநிலம், வாளையாறு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் கொடநாடு எஸ்டேட் வீட்டிற்கு ஏற்கனவே சென்று வந்துள்ளதாராம். அப்போதுதான் கனகராஜ் உடன் பழக்கம் எற்பட்டுள்ளது. மரக்கடை அதிபருக்கும் சாமியார் மனோஜ் உடன் தொடர்பு ஏற்பட்டதும் அப்படித்தானாம். எனவேதான் அவர் கொடநாடு சென்று வருவதில் சிக்கல் இல்லாமல் இருந்துள்ளது. இதைப்பயன்படுத்தி இந்த கொள்ளையில் அவரும் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

கோத்தகிரியில் விசாரணை
மனோஜை கைது செய்த போலீசார் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டி.ஐ.ஜி. தீபக் தாமோர், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் மனோஜ் சாமியாரிடம் தனியாக விசாரணை நடத்தினார்கள்.

மனோஜ் வாக்குமூலம்
மனோஜிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய நபர்களைப் பற்றி வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது. இது அதிமுக விஐபிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே கொடநாடு வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.

வீடியோவில் பதிவு
மாலையில் மனோஜ் சாமியாரை கோடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்துச் சென்று, காவலாளியை கொன்று கொள்ளை நடந்தது எப்படி? என்பது பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர் நடித்து காட்டியதை வீடியோவில் பதிவு செய்தனர். மீண்டும் அவரது முகத்தை துணியால் மூடி பாதுகாப்புடன் மீண்டும் கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்
சாமியார் மனோஜை நேற்றிரவு மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. எனவே இன்று கோத்தகிரி மாஜிஸ்திரேட் ஸ்ரீதர் முன் ஆஜர்படுத்தினர். அவரை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அம்புகள் கைது எய்தவன் யார்?
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் கொலை, கொள்ளையில் நேரடியாக ஈடுபட்டவர்கள்தான். ஆனால் பங்களாவில் கொள்ளை போன பொருட்களைப் பற்றியோ? கொள்ளையடிக்கச் சொன்னவர்கள் யார் என்பது பற்றியோ காவல்துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications