நீதிபதி கர்ணன் தலைமறைவு... மகன், மனைவியிடம் விசாரணை... கொல்கத்தா போலீஸ் ஏமாற்றம்!
கொல்கத்தா போலீசார் நீதிபதி கர்ணனை இரண்டு நாட்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், அவரது மனைவி சரஸ்வதி மற்றும் மகன் சுகனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதிலும் எந்தத் கிடைக்கவில்லை.
சென்னை: கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது மனைவி மற்றும் மகனிடம் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த விசாரணையிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கொல்கத்தா காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி சி.எஸ் கர்ணன் சென்னைக்கு விமானம் மூலம் வந்தவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கிருந்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து நீதிபதி கர்ணனைத் தேடி கொல்கத்தா போலீஸ் சென்னை வந்தது. ஆனால் நீதிபதி கர்ணன் சென்னையில் இல்லை என்று கொல்கத்தா போலீசார் உறுதிசெய்துகொண்டனர்.
இந்நிலையில் அவர் ஆந்திராவின் காளகஸ்தி, தடா பகுதிக்குச் சென்றிருக்கலாம் என சந்தேகமடைந்த கொல்கத்தா போலீசார் அவரை அங்கு தேடிச் சென்றனர். அங்கும் அவர் இல்லாத காரணத்தால் ஏமாற்றத்துடன் கொல்கத்தா போலீஸ் சென்னைக்குத் திரும்பி வந்தது.
சென்னைக்கு திரும்பி வந்த கொல்கத்தா போலீஸ், தனிப்படை அமைத்து சென்னை முழுவதும் தேடிப் பார்த்தது. ஆனால் நீதிபதி கர்ணன் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் சென்னையில் டி.ஜி.பி ரஜேந்திரனை சந்தித்துப் பேசினார்கள்.
அதன்பின்பு, சென்னை சூளைமேட்டில் குடியிருக்கும் நீதிபதி கர்ணனின் மகன் சுகனிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் அங்கு நீதிபதி வரவில்லை என கூறியுள்ளார். நீதிபதி மனைவி சரஸ்வதியுடமும் விசாரணை மேற்கொண்டார்கள். ஆனால் அவரிடமும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கொல்கத்தா போலீசார் இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் நீதிபதி கர்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் அவர் தன் உதவியாளர் மூலம், நேற்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை சமர்பித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் பிரதமருக்கு, நீதிபதி எஸ்.கே கவுல் உள்ளிட்ட 20 நீதிபதிகளின் மேல் புகார் தெரிவித்து கடிதம் எழுதிய பிறகு நீதிபதி கர்ணனுக்கு சிக்கல் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications