ரஜினி கட்சியில் சேர சில அமைச்சர்களுக்கு ஆர்வம்... கொங்கு ஈஸ்வரன் விமர்சனம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதில் இணைவதற்கு சில அமைச்சர்கள் ஆர்வமுடன் உள்ளதாக கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். அதிமுக அமைச்சர்களில் சிலர் ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் செல்ல காத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே ரஜினிக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் கருத்து கூறிவருவதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் அதனை அரசு பரிசீலிக்கவில்லை என்றும், தனது கோரிக்கையை அமைச்சர்கள் கிண்டல் செய்வதாகவும் புகார் கூறினார்.

மேலும், படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் இழந்து விட்டதாகவும், இதற்கு காரணம் தேர்வு முறைகேடு தான் என்றும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்ற போட்டித்தேர்வுகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை என்பது இப்போது வெளிச்சத்திற்கு வருவதாகவும், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டால் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈஸ்வரன் கூறினார்.
தமிழக பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க வகையில் எந்த அறிவிப்புகளும் இல்லை என்றும், கொங்கு மண்டலத்தில் தொழில்துறை அழிந்துவரும் நிலையில் அதனை காப்பாற்ற தமிழக நிதி நிலை அறிக்கையில் ஒரு அறிவிப்பு கூட இடம்பெறாதது பெரும் ஏமாற்றம் தருவதாகவும் கூறினார். நாட்டில் பொருளாதார சரிவு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளதால் அதனை திசை திருப்பும் நோக்கில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்துள்ளதாக ஈஸ்வரன் சாடினார்.
அரசு நிர்வாகத்தின் மீதுள்ள குறையை மறைக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கூட அதனை ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை என சாடினார்.












Click it and Unblock the Notifications