கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி பணிகள் தொடக்கம்
நெல்லை: பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணு உலை பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. வருடாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் மின் உற்பத்தி 60 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக, அணு உலை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூன் மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
முதற்கட்டமாக கொதிகலன் குழாயில் இருந்து நீராவியை வெளியேற்றும் பணி 3 நாட்களுக்கு நடைபெறும். இந்த பணியின்போது பெரிய அளவில் சத்தம் ஏற்படும். இதனால் கூடங்குளம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. பரமாரிப்பு பணிகள் பகல் நேரத்தில் மட்டும் நடத்தப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications