வெள்ளம் வடிந்தது... மீண்டும் கழிவு நீர் கால்வாயாக மாறிய கூவம்
சென்னை: பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கரைபுரண்டு ஓடிய கூவம் ஆற்றின் தாக்கம் இன்னும் அகலாத நிலையில் அது மீண்டும் தன் பொலிவை இழந்து சாக்கடையாக மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அங்கு செல்ஃபி எடுத்தவர்கள் தற்போது மூக்கை இறுக்கிப் பொத்திக்கொண்டு பாலத்தைக் கடந்து செல்கின்றனர்.
1800-களில் கூவம் கரையோரத்தில், அணிவகுத்து நின்ற மரங்களில் இருந்து நீரில் விழும் மலர்களை கண்டு மகிழ மாலை நேரங்களில் குடும்பமாக மக்கள் வந்து சென்றதாக ஆவணங்கள் கூறுகின்றன. அவ்வாறு பொலிவுடன் காணப்பட்ட கூவம் ஆறு இன்று கழிவு நீர் காழ்வாயாக மாறிவிட்டது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மூலமாக சுமார் 40 டன் மருத்துவ கழிவுகள் கூவத்தில் கொட்டப்படுகின்றது.மேலும், ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிற்ச்சாலைகளின் மூலமாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி கழிவுகள் கூவத்தில் கலக்கின்றன. ஆற்றின் கரைகளில் மட்டும் சுமாராக 5000 குடும்பங்களுக்கு மேல் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். இவர்களின் எல்லாவித கழிவுகளும் நேரடியாக கூவதில்தான் கலக்கிறது.
அண்மையில் பெய்த கனமழையின் போது, பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பின. அவற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கூவம் ஆற்றில் கலந்தது. இதனால் இவ்வளவு காலம் சாக்கடையாக இருந்த கூவம் ஆறு சுத்தமாகி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிந்தாதிரிப்பேட்டை, அமைந்தகரை, சேத்துப்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் புகுந்து வீடுகள் நீரில் மூழ்கின.
தற்போது மழை ஓய்ந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகள், கழிவுகள் கலந்து கூவம் ஆற்றை மீண்டும் சாக்கடையாக மாற்றியுள்ளது. இதையடுத்து, சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, அமைந்தகரை உள்ளிட்ட கூவம் ஆறு ஓடும் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே நோய் பரவாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரையோரத்தில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கூவம் ஆற்றின் வேரை அறுத்த வரலாறு நம் ஆட்சியாளர்களையே சேரும்












Click it and Unblock the Notifications