தமிழகத்தில் நாளை முழு அடைப்பு... கோவையில் ஆட்டோக்கள் ஓடாது
கோவை: கர்நாடக அரசைக் கண்டித்து நாளை தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு பேராட்டத்தில் கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, நாளை கோவையில் எந்த ஆட்டோவும் ஓடாது.
காவிரி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், அதனை கட்டுப்படுத்தாக கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதற்கு திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, சிபிஐ, மமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.