கோவையில் மனவளர்ச்சி குன்றிய இளைஞர் எரித்து கொலை - 4 பேர் கைது
கோவை: கோவையில் மனவளர்ச்சி குன்றிய இளைஞரை எரித்துக் கொன்றதாக நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பண்ணாரியின் மகன் சதீஷ் (29). இவர் மனவளர்ச்சி குன்றியவர் எனக் கூறப்படுகிறது. இதனால் சதீஷ் அடிக்கடி அப்பகுதி மக்களிடையே தகராரில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனியன்று சதீஷ் செய்த தகராறால் ஆத்திரமடைந்த அப்பகுதி வாலிபர்கள் சிலர், அவரைப் பிடித்து அருகிலிருந்த அறையிலிருந்த அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்த அறையிலிருந்து உடலில் தீப்பிடித்த நிலையில் அலறிய படி வெளியில் ஓடி வந்துள்ளார் சதீஷ். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் பலியானார்.
இந்நிலையில், சதீஷ் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சதீஷை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், அவரை எரித்துக்கொன்றதாகவும் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கன்னியம்மாள், சிவக்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.