போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்... வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... பொதுமக்கள் அவதி
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது.
Recommended Video
சென்னை : போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதை அடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் போக்குவரத்து துறை ஊழியர்களோடு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனை அடுத்து, கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். திடீரென்று எந்த வித முன்னறிவிப்புமின்றி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், பணிக்கு சென்றவர்கள், பள்ளிக்கு சென்ற குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படாததால், வழக்கமாக வெளியூரில் இருந்து வருபவர்கள், கோயம்பேடு மார்க்கெட் வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என காலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
தினமும் காலையில் கோயம்பேடு மார்க்கெட் செல்லும் சிறு வியாபாரிகள் பஸ் இல்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பூ விற்கும் பெண்கள் அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.