ஓரினச்சேர்க்கை.. 3ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொன்ற 8ம் வகுப்பு மாணவன்- அதிர்ச்சி சம்பவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி விடுதியில் ஓரினச் சேர்க்கைத் தகராறு காரணமாக 3ம் வகுப்பு மாணவனை 8ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த தாசம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்று மாணவர்கள் ஏராளமானோர் அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த திங்களன்று விடுதி குளியலையில் ரத்தகாயங்களுடன் வேலூர் மாவட்டம் ராஜாவூர் பகுதியை சேர்ந்த தனியரசு (9) என்ற 3-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்தினர். தனியரசு சடலமாக மீட்கப்பட்டதையடுத்து விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் அவரவர் வீட்டிற்கு அனுப்பப் பட்டிருந்தனர். எனவே, மாணவர்களைத் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர்.
அப்போது பெங்களூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் சக்திவேல் மட்டும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். தொடர்ந்து அம்மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியரசுவைக் கொலை செய்ததை சக்திவேல் ஒப்புக் கொண்டார்.
மேலும், சக்திவேல் தனியரசுவைக் கொலை செய்தது தொடர்பாக போலீஸ் வெளியிட்டுள்ள விபரம் பின் வருமாறு :-
விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையாக இருந்ததால் பெங்களூர் சென்ற சக்திவேல், அங்கு நண்பர்களுடன் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளான். அதிலிருந்தே ஒரு மாதிரியான எண்ணத்தில் இருந்து வந்த சக்திவேல், திங்கட்கிழமை விடுதிக்கு திரும்பியும் பள்ளி செல்லவில்லை.
அப்போது குளியலைக்கு சென்ற சக்திவேல், அங்கு குளிக்க வந்திருந்த தனியரசுவை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளான். ஆனால், தனியரசு அதற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த சக்திவேல் அருகிலிருந்த ஹாலோ பிளாக்ஸ் கல்லால் தனியரசுவைத் தாக்கி கொலை செய்துள்ளான்.
குற்றன் ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளான்.