570 மெகாவாட் மின் உற்பத்தி: கூடங்குளம் புதிய சாதனை- தாராபூரை மிஞ்சியது
நெல்லை: "கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியது" என்று அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் அணு விஜய் நகரில் குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா 1000 மெகா உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு மின் கழகத்தின் அனுமதி பெற்று முதல் அணு உலையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 180 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இடையே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. படிப்படியா சோதனை ஓட்டம் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல் அணு உலையில் மின் உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதாக வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கூடங்குளம் அணுமின்நிலையம்
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் மின் உற்பத்தி செய்ய அனுமதி பெறப்பட்டது. அந்த மாதம் மட்டும் 425 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய அனுமதி பெறப்பட்டது.

750 மெகாவாட்
அந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. தற்போது 750 மெகா வாட் உற்பத்தி செய்ய மின் உற்பத்தி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து மின் உற்பத்தி அதிகரித்தது. இரவு 7.30 மணி அளவில் அணு மின் நிலையத்தில் உற்பத்தி 570 மெகா வாட்டாக உயர்ந்தது. இன்னும் இரண்டு நாட்களில் 750 மெகா வாட் உற்பத்தி இலக்கை எட்டுவோம்.

இந்தியாவிலேயே அதிகம்
இது தான் இந்தியாவிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் அணு உலையாகும். தாராப்பூரில் உள்ள அணு மின் நிலையம் 500 மெகாவாட் கொண்டது. ஆனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அதை விட அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

50 கோடி யூனிட்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் இதுவரை 50 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
2-வது அணு உலையில் பல் வேறு கட்டமாக சோதனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications