கூடங்குளத்தில் தொடரும் உண்ணாவிரதம் – எஸ்.பி.உதயகுமார் மயக்கம்
கூடங்குளம்: அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளூர் வணிகர்கள் கடையடைப்பு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1,2 வது அணு உலைகளில் தரமற்ற பொருட்களை கொண்டு பணிகள் நடந்துள்ளதாகவும், அதனை சுய பரிசோதனை செய்ய குழுவை அமைக்க வேண்டும், அணு மின நிலையத்திக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
3,4வது அணு உலை அமைப்பற்கான பணிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் இயக்க போரட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன்பு ஜன 31 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தல அறிக்கை, பேரிடர் மேலாண்மை அறிக்கை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
5 வது நாளாக போராட்டம்
அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் புஷ்பராயன், ஜெயக்குமார், நன்மாறன், முகிலன், ராஜலிங்கம், இடிந்தகரையை சேர்ந்த பெண்கள் மெல்ரேட், சேவியரம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இன்று 5வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
உதயகுமார் மயக்கம்
போராட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் மயங்கி நிலையில் காணப்படுவதாக தகவல் கூறுகின்றன. இதையடுத்து டாக்டர்கள் அவரையும், அவருடன் உள்ளவர்களையும் பரிசோதித்து வருகின்றனர்.
கடையடைப்பு
போராட்டம் காரணமாக இடிந்தகரை, கூத்தங்குழி, கூடங்குளம், கூட்டப்புளி, உவரி, கூட்டப்பனை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர்.
இடிந்த கரையில் பதற்றம்
அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக கடந்த ஒருவாரகாலமாக கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.