இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பால் மரணம்
சென்னை: இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். கவிஞரின் இறுதிச் சடங்கு திருநெல்வேலியில் நடைபெறுகிறது.
"மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது" என்ற கவிதை தொகுப்பிற்காக 2015ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் கவிதை பரிசு, குமரகுருபரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் விருது பற்றிய அறிவிப்பு வெளியானது. இதற்கு எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பலரும் கவிஞர் குமரகுருபரனுக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பால் காலை மாரடைப்பால் காலமானார். அவருடைய அகால மரணத்துக்கு இலக்கியவாதிகள், வாசகர்கள், பலரும் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குமரகுருபரன் மறைவுக்கு ஞாநி சங்கரன் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குமரகுருபரன் இறந்த தகவல் சற்று முன் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 1999ல் என்னுடன் விண் நாயகன் இதழில் பணியாற்றியபோதே அவருடைய படைப்பாற்றலை நான் நன்கு அறிந்திருந்தேன். இன்னும் நிறைய சாதிக்கும் ஆற்றலுடன் இருந்தவர். என்றைக்காவது அவர் சினிமாவிலும் வித்யாசமான முயற்சியை செய்வார் என்று நம்பியிருந்தேன். குமாருக்கு என் அஞ்சலிகள். என்னை விட இளையவர்களின் மரணம் என்னை எப்போதும் வருத்தப்படுத்துகிறது. இளம் படைப்பாளிகள் உடலைப் பேணுவது, அதற்கேற்ற உணவு, இதர பழக்க வழக்கங்களை சபலங்களுக்கு உட்படாமல் கறராகப் பின்பற்றுவது என்ற நிலையை இனியும் மேற்கொள்ளாவிட்டால், மேலும் பல குமரகுருபரன்களை இழந்துவிட்டு புலம்பிக் கொண்டேஇருக்கும் நிலையில்தான் இருப்போம் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஞாநி சங்கரன்.

குமரகுருபரன் எழுதியுள்ள நூலில் இருந்து ஒரு கவிதை
தண்டனைகள்
நியாயமொன்றை நிறைவேற்றுகின்றன.
சில சமயங்களில் நினைவுறுத்துகின்றன.
அச்சுறுத்துகிற நியாயத் தீர்ப்பொன்றில்
கடைசிக்கணம் அறிந்தவர் யாருமில்லை
இறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.
நெஞ்சமுடைந்து இறப்போர் குறித்து
ஒரு உரை நிகழ்த்துகையில்
நிகழ்த்துபவரின் இதயத்திலிருந்து
சில துளிகள் வாயோரம் கசிகின்றன.
மெல்லத் துடைத்து விட்டு
புகைப்படம் ஒன்றிற்கு முகமளித்து
மேலும் பேச ஆரம்பிக்கையில்
நம்பிக்கையின் கடைசி தீர்ப்பைத்
தவறாக எழுதுகிறார்கள் அறியாமலேயே
இதயமிருக்கிறவர்கள் அத்துடன்
பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.
என்று தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார் குமரகுருபரன். விருது பற்றிய அறிவிப்பை கேட்ட மகிழ்ச்சியோடு மரணத்தை தழுவியுள்ளார். அவரது மரணம் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்று சமூக வலைத்தளங்களில் இலக்கியவாதிகள் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications