பேஸ்புக் காதல்- போலீஸ் உதவியுடன் காதலனை கரம் பிடித்த நர்ஸ்
நாகர்கோவில்: பேஸ்புக் மூலம் உருவான காதலை போலீஸ் உதவியுடன் வெற்றி பெறச் செய்துள்ளார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர்.
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மணிகட்டி பொட்டலை சேர்ந்தவர் வசந்தி. பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜேரோம் என்பவர் நண்பரானார். அவர்களிடையே காதல் ஏற்பட்டது. அவ்வப்போது நேரிலும் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2014ம் ஆணடு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நர்ஸ் கேட்டதற்கு வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்வோம் என்று ஜேரோம் கூறியுள்ளார். இதனால் ஏமாற்றம் அடைநத நர்ஸ் விஷம் குடிதது தற்கொலை முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பின் குணமானார்.
இதற்கிடையே ஜேரோம் சென்னையில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி சென்றார். வசந்தியும் கோவைக்கு வேலை கிடைத்ததாக கூறி சென்னைக்கு சென்றார். சென்னையில் தனியாக வீடு எடுத்து இருவரும் கணவன்-மனைவியாக 6 மாதங்கள் இருந்தனர்.
இந்த நிலையில் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டனர். இதனால் அங்கிருந்து ஊர் திரும்பியவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று தங்கினர். அதன் பிறகு பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் 6-5-2015ல் அன்று நர்ஸ் வெளிநாடு சென்றார். அங்கு காதலால் வேலை சரியாக பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் காதலனின் பெற்றோர் தொடர்ந்து திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை அறிந்த அவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு தரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.