ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், பண்ணாரி அம்மன் கோவில்களில் இன்று குடமுழுக்கு!!
ராமேஸ்வரம்/ திண்டுக்கல்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் இன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது.
தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் கடந்த சில ஆண்டுகளுகாக திருப்பணி நடைபெற்று வந்தது. இதற்கு தமிழக அரசும் நிதி உதவி அளித்தது.
ராமேஸ்வரம் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 5 நிலைகளுடன் 91 அடி உயரத்தில் வடக்கு, தெற்கு பகுதியில் இரண்டு கோபுரங்கள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த 2 கோபுரங்களுக்கும் சேர்த்து இன்று குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள ஸ்ரீ காளகத்தீஸ்வரர் - ஸ்ரீ அபிராமி அம்மன் திருக்கோயில் தரைத்தளத்திலிருந்து நான்கரை அடி ஆழத்தில் உள்ளது. இந்தக் கோயில் கடந்த 2012-ம் ஆண்டிற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக, கடுமையாக சேதம் அடைந்தது. சிதிலமடைந்த இந்தக் கோயிலை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.
52 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ராஜகோபுரத்தில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கொடுங்கை எனும் கற்சிற்ப யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் 4 மூலைகளிலும், 48 யாழித் தூண்கள் நிறுவப்பட்டு, திருவிளையாடல் புராணம், அம்பாள் சரித்திரம் உள்ளிட்ட தெய்வீக பெருமைகளைக் கூறும் காட்சிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேக்குமரத்தால் தயாரிக்கப்பட்ட 42 அடி உயர கொடி மரம், தங்கம் மற்றும் செப்புத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சிற்பக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரே கல்லினால் ஆன ஸ்ரீ சக்கரமும், காளகஸ்தி கோயிலில் உள்ளது போல ராகு-கேது திருவுருவம் ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோவில்களில் குடமுழுக்குவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இன்று குடமுழுக்கு நடைபெறுவதால் இக்கோவில்கள் உள்ள உள்ளூர் பகுதிகளில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications