கும்பகோணத்தில் ஆணவக் கொலை?.. ஊருக்குள் வந்த புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. சகோதரன் தலைமறைவு
கும்பகோணம்: கும்பகோணத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் சோழவரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த சில ஆண்டுகளாக வேறு ஜாதியை சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சரண்யா வீட்டில் சேகர் பெண் கேட்ட போது அவரது ஜாதியை குறிப்பிட்டு பெண் தர சரண்யா வீட்டில் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள சரண்யாவும் சேகரும் போராடினர். இந்த நிலையில்தான் சரண்யாவுக்கு அவரது சகோதரர் சக்திவேல் வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார்.
விருதுநகர் அருகே இரட்டை கொலை... தொடரும் பதற்றம்! உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
காதல் திருமணம்
இதனால் இனியும் நாம் ஒன்று சேர மாட்டோம் என தெரிந்து கொண்ட சேகரும் சரண்யாவும் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த சக்திவேல் கடும் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் 5 நாட்கள் கழித்து தனது ஊருக்கு கணவருடன் சரண்யா வந்துள்ளார்.
போலீஸ் வலை
இதையறிந்த சக்திவேல் அவரது நண்பர் ரஞ்சித்துடன் சேர்ந்து சரண்யாவையும் சேகரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது சடலத்தையும் கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக உள்ள சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை தேடி வருகிறார்கள்.
தொடரும் சம்பவங்கள்
கடந்த சில காலங்களாக ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்வோர் மீது கொலையும் கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. இது போல் இந்தியா முழுவதும் நிறைய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
தீர்ப்பு
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றவேண்டும் என அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.