கும்பகோணத்தில் 32 குளங்களை காணோம்... ஹைகோர்ட்டில் வழக்கு
தஞ்சாவூர்: கிணத்தைக் காணோம் என்று வடிவேலு ஒரு படத்தில் காமெடி செய்வார்... ஆனால் 32 குளங்களைக் காணோம் என்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மாயமான குளங்களை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதீமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழா, வரும் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவின் போது, அங்குள்ள புனித குளங்களில் மக்கள் நீராடுவார்கள் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

கும்பகோணத்தில் மொத்தம் 44 புனித குளங்கள் இருந்த நிலையில், தற்போது 12 குளங்கள் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 32 குளங்களை பலர் ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளதாகவும் யானை ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார் எனவே காணாமல் போன குளங்களைக் கண்டறிந்து அதிலுள்ள ஆக்கிரமிப்புகளைக் அகற்றத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், கும்பகோணம் நகரிலுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மனுதாரர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அதனுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications