கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 பிஞ்சுகள் கருகிய 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
கும்பகோணம் பள்ளி தீவிபத்து: 94 குழந்தைகளுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
Recommended Video
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளில் இன்று திங்கள்கிழமை குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள், கண்ணிர் அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்த குழந்தைகள் நினைவாக இந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 16 ஆம் தேதி, 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 குழந்தைகள் தீக்காயம் அடைந்தனர். ஆண்டுதோறும் ஜூலை 16 ஆம் தேதி உயிரிழந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இந்த ஆண்டு இன்று அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தங்களுடைய வீடுகளில் குழந்தையின் படத்துக்கு படையலிட்டு அஞ்சலி செலுத்தினர்.
94 குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியின் வளாகத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் கூடி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் படையலிட்டும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவாக குழந்தைகள் தினமாக கடைபிடிக்க அரசு அறிவிக்க வேண்டும், இன்று ஒரு நாள் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.