கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் வழக்கு.. வக்கீல் சங்கம் எச்சரிக்கை
சென்னை: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால், விரைவில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மாவட்ட பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு தலைமை அலுவலகங்கள் கும்பகோணத்தில் உள்ளன.
விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக பல மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது போன்று கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக அறிவிக்ககப்படாதது அதிருப்தி அளிப்பதாக பொதுமக்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர உள்ளதாக வழக்கறிஞர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர் சங்க மாநில பொதுச் செயலாளர் காசிபுதிய ராஜா தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டமாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதிதாக திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.