கொரோனா இருக்கு.. கிட்ட வந்தீங்க உங்களுக்கும் கொடுத்துருவேன்.... போலீஸாரை அலறவிட்ட இளைஞர் வீடியோ
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் பகுதியில் மணல் அள்ளுவதற்கு பணம் வாங்கிக் கொண்டு, போலீசார் தனது வண்டிகள் மீது வழக்குப் போட்டதாகக் கூறி, கொரோனா நோயாளி ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்து செல்பி வீடியோ வெளியிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Recommended Video
தஞ்சை மாவட்டம் குலசேகரநல்லூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அப்பகுதியிலுள்ள ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தியதாக இவருக்கு சொந்தமான மூன்று டிராக்டர்களை, பந்தநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பந்தநல்லூர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த இளையராஜாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் காவல்நிலையத்திற்கு வந்த அவர் செல்ஃபி வீடியோ எடுத்தார்.

பணம் வாங்கி
ஒரு கருத்தை பதிவு செய்தார். அதில் பணம் வாங்கிக் கொண்டு தினமும் 30 வண்டிகள் இரவில் தடையின்றி மணல் கடத்த அனுமதிக்கப்படுகிறது. "என் வண்டியையே பிடிக்கிறீர்களா?" எனக் கேட்டு போலீசாரை ஒருமையில் பேசி வெளியே வருமாறு அழைத்தார். தனக்கு கொரோனா இருப்பதாகவும், தன்னைத் தொடுபவர்களுக்கும் கொரோனா தொற்றிக் கொள்ளும் என்றும் பயமுறுத்தியவாறே செல்பி வீடியோ எடுத்தார் இளையராஜா.

சவால்
போலீசாருக்கு கடுமையான வார்த்தைகளால் சவால் விட்டதோடு அந்த வீடியோவை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து விட்டு இளையராஜா தலைமறைவானதாக கூறப்படுகிறது. காவல் நிலைய வாசலில் நின்று போலீசார் மீது லஞ்சம் வாங்கியதாக பகிரங்கமாக புகார் தெரிவித்தபோது, ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டுமே அங்கு இருந்துள்ளார்.

வெளியாகிய வீடியோ
அண்மைக்காலங்களாக போலீஸை மிரட்டும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. சென்னையில் ஊரடங்கு நேரத்தில் தாய்க்கு மருந்து வாங்க சென்ற வழக்கறிஞர் ஒருவர் போலீஸாரை மிரட்டும் தொனியில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண் வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது போல் அண்மையில் விசிக வழக்கறிஞர் ஒருவர் மாஸ்க் போடாமல் வாகனத்தை ஓட்டியதாகவும் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியதற்கு போலீஸாரை ஒருமையில் பேசிய சம்பவங்களும் நடந்துள்ளன.

துன்புறுத்தல்
அது போல் போலீஸாரும் பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகளையும் நாம் பார்த்துள்ளோம். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் கும்பகோணத்தில் போலீஸாரை இளைஞர் ஒருவர் ஒருமையில் பேசிய சம்பவம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தலைமறைவாக உள்ள அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications