குஷ்பு காங்கிரஸில் சேர்ந்துள்ள 'டைமை' பார்க்க வேண்டும்.. பாஜகவுக்கு புதுச்சேரி காங். புது விளக்கம்
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைந்திருக்கின்ற தருணத்தைப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள இந்த தருணத்தில் அவர் மிக துணிச்சலாக மதச்சார்பின்மையைக் காக்க தேச நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரஸில் சேர்ந்துள்ளார். பதவி ஆசையில் சேரவில்லை என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரராகவன் என்பவர் விளக்கியுள்ளார்.
குஷ்புவை விமர்சித்து வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்து வீரராகவன் விடுத்துள்ள அறிக்கை:
காங்கிரசில் இணைந்துள்ள குஷ்புவிற்கு காங்கிரஸ் வரலாறே தெரியாது என்றும், காங்கிரஸ் வரலாறை முழுமையாக அறியாதவர் என்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி நடிகை ஸ்மிருதி ராணியை மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சராக பதவியில் அமர்த்தியுள்ளது. அவருக்கு தெரிந்த வரலாறு, அரசியல் ஆகியவற்றை விட குஷ்புவிற்கு அதிகமாகவே காங்கிரஸ் வரலாறு தெரியும். ஸ்மிருதி ராணியை விட தேச நலனில் அதிக அக்கறை கொண்டவர் குஷ்பு.
முதலில் காங்கிரசில் குஷ்பு இணைந்திருக்கிற தருணத்தை பார்க்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள இந்த தருணத்தில் மிக துணிச்சலாக மதசார்பின்மையை பாதுகாக்க தேச நலனை கருத்தில் கொண்டு கட்சியில் இணைந்துள்ளார். அதிகார பதவிக்கான ஆசையால் அல்ல.
தமிழிசை சவுந்தரராஜன் பாரதீய ஜனதாவில் சேரும் போது அவருக்கு என்ன வரலாறு தெரியும். காந்தியவாதியின் மகளாக பிறந்து காங்கிரஸ் வரலாறு தெரிந்து கொண்டு பின்பு காந்தியவாதத்திற்கு நேர் எதிரான வாதத்தை உயர்த்தி பிடிக்கக்கூடிய வகுப்புவாத கட்சியில் ஐக்கியமாகி இருப்பது சுயநல அரசியல் லாபத்திற்கு தானே?
தமிழிசை ஒரு பெண் என்ற அடிப்படையில், அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முன் வருகின்ற மற்றொரு பெண்ணை பாராட்டவில்லை என்றாலும் ஆணாதிக்க பொறாமை மனப்பான்மையோடு குறைத்து விமர்சனம் செய்யக்கூடாது. அது தவறு என்று கூறியுள்ளார் வீரராகவன்.