“மக்களின் உயிர் மீது ஜெ.வுக்கு அக்கறை இல்லை”... கருணாநிதியைச் சந்தித்த பின் குஷ்பு பேட்டி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நேற்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு. அதனைத் தொடர்ந்து, ‘மக்களின் உயிர் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை' என அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக குஷ்பு சென்னை மயிலாப்பூரில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. இன்னமும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காததால், இந்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார் குஷ்பு. இதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, காங்கிரஸ் வேட்பாளர்கள் ராயபுரம் மனோ, ஏ.ஜி.சிதம்பரம், ஹசன் ஹாரூன், மலேசியா பாண்டியன், வசந்த குமார் ஆகியோரும் கருணாநிதியை நேற்று சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கருணாநிதியைச் சந்தித்தபின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் குஷ்பு. அப்போது, " மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்தேன். எப்போதும் நான் சொல்வது போல, எனக்கு தலைவர்(கருணாநிதி) மீது மரியாதை இருக்கிறது. எப்போதும் அது குறையாது. இடையில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும், வேறு கட்சியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துள்ளேன். தலைவருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
நான் தி.மு.க.வில் சேர்ந்தபோது (2010-ம் ஆண்டு) எனக்கு அரசியல் தெரியாது. அரசியலில் எல்லாம் சொல்லி கொடுத்தவர் தலைவர் தான். அவர் நாளை மறுதினம் பிரசாரம் தொடங்குகிறார். நானும் பிரசாரம் தொடங்க உள்ளேன். அப்புறம் இருவரும் பிசியாகிவிடுவோம். எனவே அவரை தற்போது சந்தித்துள்ளேன்'' என்றார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி மக்கள் உயிரிழப்பு தொடர்ந்து வருவது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, "ஜெயலலிதா பிரசாரத்தின்போது பலர் உயிரிழந்து வருகின்றனர். யாருடைய உயிர் மீதும் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை, இறந்தவர்களுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. ஹெலிகாப்டரிலேயே மக்களை சந்தித்து வந்தால் மக்களின் குறைகள் எப்படி தெரியும்?
அடுத்து ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என சொல்லும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது மதுவிலக்கை ஏன் கொண்டுவரவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.
அதோடு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதில் எஞ்சியுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை (இன்று) வெளியிடப்படும். கட்சி தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் அங்கு போட்டியிடுவேன்'' என்றார்.
இதன்மூலம், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக குஷ்பு அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது தன்னை கருணாநிதி நலம் விசாரித்ததாகவும், பின்பு ஆசிர்வாதம் வழங்கியதாகவும் குஷ்பு தெரிவித்தார். அதோடு, தான் திமுகவில் இருந்த போது கருணாநிதியைச் சந்தித்ததற்கும், தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக அவரைச் சந்திப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற குஷ்பு, ‘அப்போது போன்று தான் இப்போதும் அவர் இருக்கிறார். எந்த மாற்றமும் இல்லை' என்றார்.












Click it and Unblock the Notifications