தென் மண்டல காங். நிர்வாகிகள் 17ம் தேதி தூத்துக்குடியில் கூடுகிறார்கள்.. குஷ்புவும் வருகிறார்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரும் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூ பங்கேற்கிறார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் 17ம் தேதி தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மகாலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது.
காலை 9மணிக்கு மாநாட்டை நான் (தனுஷ்கோடி ஆதித்தன்) கொடியேற்றி துவக்கி வைக்கிறேன். மாநாட்டிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகிக்கிறார்.
மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுசெயலாளர் முகுல்வாஸ்னிக், செயலாளர்கள் திருநாவுக்கரசு, சென்னாரெட்டி, அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
இந்த மாநாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பார்கள். மாநாட்டில் கோபண்ணா, நெல்லைசாமி, சிங்கை தருமர் உள்ளிட்டவர்களும் பங்கேற்று ஒவ்வொரு தலைப்பில் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் முடிவில் தென்சென்னை மாவட்ட தலைவர் தங்கம்மாள்புரம் பொன்பாண்டியன் நன்றி கூறுகிறார். முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ வேல்துரை வரவேற்புரை ஆற்றுகிறார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றுகின்றனர் என்று கூறினார். பேட்டியின்போது, மாநில துணைத்தலைவர் சண்முகம், தென்சென்னை மாவட்ட தலைவர் தங்கம்மாள்புரம் பொன்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ வேல்துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.