திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து குஷ்பு ராஜினாமா!!
சென்னை: திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட, அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக நடிகை குஷ்பு இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதம்:
என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக் கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியது கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை நன்கு அறிவார்கள்.
ஆனால் என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலா மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்.
-இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்த குஷ்பு, 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.