போலீசார் மிரட்டலைத் தொடர்ந்து சசிகலாவை சிறைபிடிக்கும் போராட்டத்தை கைவிட்ட கூவத்தூர் பொதுமக்கள்!
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலாவை சிறைபிடிப்போம் என கூவத்தூர் பொதுமக்கள் கடும் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் போலீசார் மிரட்டலைத் தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சி இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவை சிறைபிடிக்கப் போவதாக கூவத்தூர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் மிரட்டல் விடுத்த நிலையில் இப்போராட்டம் கைவிடப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏக்களை மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளார் சசிகலா. அங்கிருந்து எம்.எல்.ஏக்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.

இதனால் அதிர்ந்து போன சசிகலா நேரடியாக கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ரிசார்ட்டுக்கு சசிகலா சென்றுள்ள நிலையில் கூவத்தூர் கிராம மக்களை அந்த ஊருக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
இது அப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்தது. சசிகலா மற்றும் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூவத்தூர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சசிகலாவும் எம்.எல்.ஏக்களுடம் உடனே கூவத்தூரை விட்டு வெளியேறாவிட்டால் முற்றுகைப் போராட்டத்தை நடத்தப் போவதாக பொதுமக்கள் எச்சரித்தனர்.
சசிகலா 3 மணிநேரமாக கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். அவர் வெளியே வரும் போது முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தலாம் என்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பொதுமக்களின் பிரதிநிதிகளை போலீசார் சந்தித்து சிறைபிடிப்பு போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் பொதுமக்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்படலாம் என பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒருவழியாக பொதுமக்கள் சமாதானமடைந்தனர்.
இதனால் 3 மணிநேர ஆலோசனையை முடித்து சசிகலா வெளியே வந்த போது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications