முதல்ல அதிமுக விட்டு தரணும்.. கேப்டன் ஓகே சொல்லணும்.. ஆனா அதுக்குள்ள ஆம்பூரை "எடுத்துகிட்ட" சுதீஷ்!
ஆம்பூர்: ஆம்பூர் தொகுதியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்னை பார்க்கலாம் என தேமுதிக துணை செயலாளர் எல் கே சுதீஷ் கூறியதை பார்த்தால் அவர் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடுவாரோ என்றும் அதைத்தான் அவர் சூசகமாக கூறியுள்ளாரோ என்றும் கேள்வி எழுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.
தற்போது தேர்தல் பிரச்சாரம் மட்டுமே நடைபெறுகிறது. இன்னமும் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை இருக்கின்றன. தேமுதிகவை பொருத்தமட்டில் அதிமுக கூட்டணியில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணி
ஆனால் ஒவ்வொரு முறை தேமுதிக நிர்வாகிகள், அதாவது பிரேமலதா, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் பேசும் போது நாங்கள் தனித்து போட்டியிடவும் தயார் என்கிறார்கள். ஆனால் அதிமுக கூட்டணியில்தான் இன்னமும் இருக்கிறார்கள் என்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு அவர்கள் எதிர்க்கும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள். இப்படியாக பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

சட்டசபை தொகுதிகள்
இந்த நிலையில் ஆம்பூர் அருகே ஆலாங்குப்பத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தேமுதிக புதிய உத்வேகத்துடன் பக்காவாக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தமிழக சட்டசபை தொகுதிகள் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குடியாத்தம்
இதில் வேலூர் மண்டலத்திற்கு நான் தேர்தல் பொறுப்பாளராக உள்ளேன். 32 சட்டசபைத் தொகுதிகள் உள்ள இந்த வேலூர் மண்டலத்தில் 2011ஆம் ஆண்டு 7 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டோம். அது போல் வரும் தேர்தலில் 12 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளோம். 2006 இல் நடந்த தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் நான் போட்டியிட்டேன்.

சூசகம்
வேலூர் மாவட்டம் எனது சொந்த மாவட்டம் என்பதால் எப்போதும் எனக்கு பாசம் உண்டு. இந்த முறை தேமுதிக தலைமை வாய்ப்பு கொடுத்தால் என்னை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆம்பூரில் நீங்கள் பார்க்கலாம் என்றார். ஆம்பூர் தொகுதியில் சுதீஷ் போட்டியிடுவதைத்தான் சூசகமாக அவர் சொல்லியுள்ளார் என்று தெரிகிறது. இந்த தொகுதியில் சுதீஷை நிறுத்த விஜயகாந்த் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த தொகுதியை அதிமுக விட்டுத் தர வேண்டும். இத்தனை இருக்கும் நிலையில் ஆம்பூர் தனக்குத்தான் என சுதீஷாகவே பிரகடனப்படுத்திக் கொள்வது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக
ஆம்பூர் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக ஒரே ஒரு முறை வென்றுள்ளது. அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக வென்ற நிலையில் அந்த தொகுதி எம்எல்ஏ ஆர் பாலசுப்பிரமணி சபாநாயகரால் 2017இல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2019இல் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை தோற்கடித்துவிட்டு திமுக வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications