பஸ் நிலையத்தில் போதையில் மயங்கிய இளம்பெண்- வாலிபர் ஓட்டத்தால் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே பஸ் நிலையத்தில் இளம்பெண் மயங்கி கிடந்தார். அவருடன் வந்த வாலிபர் ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுவால் சீரழியும் குடும்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த மதுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேரன்மகாதேவி பஸ் நிலையத்தில் இரவு 8 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தள்ளாடியவாறு வந்தார்.
ஆண்கள் அமரும் இருக்கைகள் பகுதியில் அவர் அமர்ந்தார். அங்கிருந்த பயணிகள் அவரை உடல் நலம் இல்லாதவர் என எண்ணி பரிதாபப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பெண் வாந்தி எடுத்தப்படி மயங்கி விழுந்தார். அதன்பிறகு தான் அவர் போதையில் இருந்ததை பொதுமக்கள் உணர்ந்தனர். பஸ் நிலையத்திற்கு வந்த போலீசாரும் அந்த பெண்ணை கண்டும் காணாமலும் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் லுங்கி, டிசர்ட் அணிந்த ஓரு வாலிபர் அங்கு வந்தார். அந்த பெண்ணை பிரான்சேரியை சேர்ந்த தன் நண்பரின் மனைவி என கூறி ஆட்டோவில் ஏற்றினார்.
பிரான்சேரிக்கு சென்றதும் இருவரையும் இறங்கும்படி ஆட்டோ டிரைவர் கூறினார். அவர்கள் இறங்க மறுத்ததால் பத்தமடை காவல் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தினார். அங்கு போலீசாரை கண்ட வாலிபர் பயந்து போய் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். இதை தொடர்ந்து அந்த பெண்ணை ஆட்டோவில் இருந்து இறங்கி விட்டு விட்டு ஆட்டோ டிரைவர் சென்று விட்டார். சிறிது நேரத்தில் போதை தெளிந்ததும் அந்த பெண் உடனடியாக மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பதும் யார் என்பதும் தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.