பச்சிளம் குழந்தையை ரோட்டில் வீசிவிட்டு சென்ற தாய் – மீட்கப்பட்ட குழந்தை!
கோவை: கோவை மாவட்டத்தில் சாலையோரத்தில் வீசப்பட்ட பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகரிலுள்ள திருச்சி சாலையில் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் வணிகவளாகம் அருகே புதன்கிழமை நள்ளிரவு சிறுநீர் கழிக்கசென்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த ஒரு பையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டள்ளது.
உடனே சந்தேகம் கொண்ட அவர் அந்த பையை திறந்து பார்த்தார். அதில், பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
நிகழ்விடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் அந்த குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார்.
குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தை உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சைக்குப் பிறகு, இக்குழந்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலமாக கிணத்துக்கடவில் உள்ள சரணாலயம் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.