ஓடும் ரயிலில் பெண் பொறியாளரைக் கீழே தள்ளி செயின் பறிப்பு – மர்மமனிதன் கைவரிசை
சென்னை: சென்னையில் பெண் மென்பொறியாளர் ஒருவரிடம் இருந்து தங்க செயினை பறித்து கொண்டு அவரை ஓடும் ரயிலில் இருந்து மர்மநபர் கீழே தள்ளிய சம்பவம் ரயில் பயணிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்தவர் நாகராஜன். பாரிமுனையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி முனீஸ்வரி. தாம்பரத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பொறியாளராக வேலை பார்க்கிறார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து முனீஸ்வரி வீட்டுக்கு புறப்பட்டார். தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை சந்திப்புக்கு செல்லும் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறினார்.
தனியாக பயணித்த அவர் கணவருடன் செல்போனில் பேசி கொண்டே சென்றார். கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்று புறப்பட்டது. அப்போது ஓடும் ரயிலில் முனீஸ்வரி இருந்த பெட்டியில் ஒரு வாலிபர் ஏறினார்.
திடீரென முனீஸ்வரியின் அருகில் சென்ற வாலிபர் அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத முனீஸ்வரி கூச்சலிட்டார்.
ஆனால் ரயில் சென்ற வேகத்தில் அவரது அலறல் யாருக்கும் கேட்கவில்லை.
அந்த வாலிபர் அவரது பை மற்றும் செல்போனை பறிக்க முயற்சித்தபோது அவருடன் முனீஸ்வரி போராடினார்.
கடற்கரை ரயில் நிலையத்தை ரயில் நெருங்கி கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் முனீஸ்வரியை ரயிலில் இருந்து கீழே தள்ளினார். இதில் தண்டவாளத்தில் விழுந்த முனீஸ்வரி படுகாயமடைந்து துடித்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி ஒரு மின்சார ரயில் வந்தது. அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த முனீஸ்வரியை பார்த்தவுடன் உடனடியாக கீழே இறங்கி வந்தார். முனீஸ்வரியை மீட்டு கடற்கரை ரயில்வே போலீசாரிடம் அழைத்து சென்றார். போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
நாகராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் அங்கு சென்றார். புகாரின்பேரில் எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் படுகாயமடைந்த முனீஸ்வரி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெண் பொறியாளரிடம் நகையை பறித்து கொண்டு அவரை ஓடும் ரயிலில் இருந்து மர்மநபர் கீழே தள்ளிய சம்பவம் ரயில் பயணிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications