கருணாநிதி நலம் பெற வேண்டும்.. இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி குடும்பத்தினரிடம் நலம் விசாரித்துச் செல்கின்றனர்.
மாநில, தேசிய தலைவர்கள் வந்து சென்றவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இலங்கை தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் எம்.பி. ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். காவேரி மருத்துவமனைக்கு வந்த அவர்கள் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
பின்னர் இலங்கை அதிபர் சிறிசேனாவின் கடிதம் ஒன்றையும் ஸ்டாலினிடம் கொடுத்தனர். அதில் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாக சிறிசேனா தெரிவித்துள்ளார்.