விவசாயிகள் போராட்டத்திற்கு வலுக்கிறது ஆதரவு… சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் ரயில் மறியல்
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் 21 நாட்களாக பல்வேறு வகையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், சமூக இயக்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் ஒன்று கூடிய சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென புறநகர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல்
திரளாக சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் முதலில் கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து தண்டவாளத்திற்குள் குதித்த மாணவர்கள் ரயிலை மறித்து மத்திய அரசு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
போலீசார் பேச்சுவார்த்தை
பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவர்களை போராட்டத்தை நிறுத்தி தண்டவாளத்தில் இருந்து மேடைக்கு வரவழைத்தனர். அப்போது மாணவர் பிரதிநிதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பெருகும் ஆதரவு
கடந்த 20 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் சென்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.
எச்சரிக்கை
அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் கொதித்துப் போய் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போலீசார் நசுக்கி வருகின்றனர். இனிமேலும் விவசாயத்திற்காக போராடும் எந்த ஒரு மாணவரையும் தடுத்து நிறுத்தக் கூடாது.
அரசு அலுவலகங்கள் முற்றுகை
விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மாணவர் சக்தியை ஒன்று திரட்டி ரயில்களை முற்றுகையிட்டு போராடுவோம். மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு
இதே போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் மத்திய அரசு முற்றிலும் கைவிட வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மாணவர்களும் நெடுவாசலுக்கு புறப்பட்டு செல்வோம் என்று மாணவர்கள் கூறினார்கள்.