தினசரி 7 கொலைகள், 70 கொள்ளைகள்.... அதிமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம்- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் தினமும் சராசரியாக ஏழு கொலைகளும், 70 கொள்ளைகளும் நடந்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அச்சமளிக்கும் வகையில் அதிகரித்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவின் துறையான காவல்துறை மானியக் கோரிக்கை இன்று விவாதம் நடைபெற உள்ள நிலையில், அதிமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் என்ற தலைப்பில், கருணாநிதி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை 9,948 படுகொலைகளும், சுமார் ஒரு இலட்சம் கொள்ளைகள், திருட்டுகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
- கொலை மற்றும் கொள்ளையை மட்டும் எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் தினமும் சராசரியாக ஏழு கொலைகளும், 70 கொள்ளைகளும் நடந்து வருகின்றன.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அச்சமளிக்கும் வகையில் அதிகரித்துவிட்டன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,335 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமாகும்
- முக்கிய கொலைகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் இந்த அரசு திறமையாகச் செயல்படவில்லை. அதற்கு உதாரணம் தேடி வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை.
- திருச்சியில் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை நடைபெற்று எத்தனையோ மாதங்கள், ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
- சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 10-8-2016 அன்று இந்தக் கொலை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு இறுதி வாய்ப்பாக இரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது.
- 'பீரோ ஆஃப் போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், 21,232 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
- அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் போராட்டங்கள், மத ரீதியாக நடந்த போராட்டங்கள் என்று சமூக அமைதியின்மையின் வெளிப்பாடாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களிலும் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்கியதுதான் ஜெயலலிதா அரசின் சாதனை(!).
- 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்று, அந்த ஐந்தாண்டு காலத்தில் 180 அவதூறு வழக்குகளை எதிர்க்கட்சிகள் மீது தொடுத்தார். தற்போது 2011 முதல் 2015ஆம் ஆண்டு முடிய உள்ள ஐந்தாண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறதே, எந்தத் தேர்தலிலாவது இந்த முறை போல பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? ஐந்து மாநிலங்களில் மொத்தம் ரூபாய் 133 கோடி பறிமுதல் என்றால், அதிலே தமிழகத்தில் மட்டும் சுமார் ரூபாய் 100 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
- திரைப்படங்களில்தான் நாம் கண்டிருப்போம். ஓடும் ரயிலில் கொள்ளை அடிப்பதை... ஆனால், அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியில் சேலத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 5 கோடியே 80 லட்சத்தை இரவோடு இரவாகக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடைபெற்ற பெருமையும் இந்த ஆட்சிக்குத்தான் உண்டு.
- இந்த கொள்ளைகளையும், கொலைகளையும் கண்டுபிடிக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை உண்டோ இல்லையோ, சென்னையில் தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்திய திமுகழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரி உடனடியாக ஒரே நாளில் ராமநாதபுரம் கடலோரக் காவல் படைக்கு மாற்றப்பட்ட நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. இவைதான் அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படும் லட்சணம்! என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications