தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: வைகோ குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாவின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மதிமுகவின் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாநாட்டை மதிமுக சட்டத்துறை செயலாளர் வீரபாண்டியன் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டத் தலைவர் பூவை மு.பாபு வரவேற்புரை வழங்கினார்.
அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ராசேந்திரன் மதிமுக கொடியை ஏற்றி வைத்தார். சட்ட திருத்த குழு செயலாளர் அருணாசலம் அண்ணா சுடர் ஏற்றி வைத்தார். இறுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தின் வளர்ச்சி
மாநாட்டில் பேசிய வைகோ, பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் ஒட்டுமொத்த சராசரியைவிட தமிழகத்தின் சராசரி விகிதம் குறைந்துள்ளதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதிமுக எத்தனை போராட்டங்கள் நடத்தியது என்றும் வினா எழுப்பினார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
தமிழ்நாட்டில் தினசரி, கொலை, கொள்ளை நடைபெறுகிறது. தீவிரவாதிகள் கைது செய்யப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.
18 தீர்மானங்கள்
கச்சத்தீவை மீட்க வேண்டும், மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.