பெங்களூர் நீதிபதியை கண்டபடி திட்டி போஸ்டர் ஒட்டிய கடலூர் வழக்கறிஞர் கைது
கடலூர்: பெங்களூர் சிறப்பு கோர்ட் நீதிபதி மைக்கேல் குன்ஹாவை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டிய வழக்கறிஞர் கடலூரில் கைது செய்யப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் குன்ஹாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் அடித்து போராட்டங்கள் நடத்தினர்.

இதேபோல கடலூர் மாவட்டம் ஆவினகுடி பகுதியை சேர்ந்த வக்கீல் டி.தங்ககொளஞ்சிநாதன் (50) என்பவரும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இவர் திட்டக்குடி கோர்ட்டில் பிராக்டீஸ் செய்துவரும் வக்கீலாகும்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரை தொடர்ந்து திட்டக்குடி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதன்பிறகு ஜாமீனில் தங்ககொஞ்சிநாதன் வெளியில் வந்துள்ளார்.
இவர் ஒட்டியிருந்த போஸ்டரில், நீதி தோற்றது, அநீதி வென்றது என்று தலைப்பை போட்டு, கருணாநிதி, சுப்பிரமணியன்சுவாமி ஆகியோரது சூழ்ச்சிக்கு உடன்பட்டு தர்மத்திற்கு தண்டனை அளித்திட்ட சட்டம் தெரியாத நீதிபதி, கன்னட மொழி வெறிபிடித்த மைக்கேல் டி குன்ஹா என்பது உள்பட மரியாதை குறைவான வார்த்தைகளால் குன்ஹா அர்ச்சிக்கப்பட்டிருந்தார்.
அந்த போஸ்டரில் அமைச்சர் சம்பத், அதிமுக எம்.பிக்கள் அருண்மொழிவர்மன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பெயர்களையும் வக்கீல் அச்சடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications