வழக்கறிஞர் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி ரயில் மறியல்- தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கைது
சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதிய சட்டத்திருத்தத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி, நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர்ளின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவந்ததை முழுவதும் உயர் நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்றும் இதை வலியுறுத்தி ஜூன் 28ம் தேதி முதல் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராடம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 29ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டமும், ஜூலை 1ம் தேதி சட்ட விதிகள் திருத்த நகலை எரிக்கும் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் கூட்டத்தில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
திருவாரூரில் 100 வழக்கறிஞர்கள் கைது
வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை திரும்பப்பெற கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் ரயில் நிலையத்தில் எர்ணாகுளம் ரயிலை மறிக்க முயன்ற 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் கைது
இதே போன்று தஞ்சையில் சோழன் விரைவு ரயிலையும் மறித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் போராட்டம் கைது
சேலம் டவுன் ரயில் நிலையத்தில் சேலம்-விழுப்புரம் பயணிகள் ரயிலை மறித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். வழக்கறிஞர் சட்டத்திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெறக் கோரி மாறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.