அதிமுக தலைமை அலுவலகத்தை நோக்கி படையெடுக்கும் ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள்
சென்னை: திமுகவுக்கு குட்டிக் குட்டிக் கட்சிகள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்பதைப் போல அதிமுகவுக்கும் பல்வேறு குட்டிக் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நாளை 50 அமைப்புகளின் நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனராம்.
முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில்தான் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். முதல் கட்டமாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட 7 கட்சித் தலைவர்களை ஜெயலலிதா அழைத்து பேசினார்.

அடுத்த கட்டமாக இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்பட மேலும் 5 கட்சித் தலைவர்களை ஓரிரு நாளில் ஜெயலலிதா சந்தித்துப் பேசவுள்ளார்.
23ம் தேதி தமாகா தலைவர் ஜி.கே.வாசனை முதல்வர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 50 குட்டிக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், ஜெயலலிதாவைச் சந்திக்க டைம் கேட்டுள்ளனர். ஆனால் முதல்வரை பிறகு பார்க்கலாம் என்றும் நாளை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் மூத்த அமைச்சர்கள் குழுவைச் சந்திக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இதனால் இந்த அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நாளை மாலை 4 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தி்ல் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவைச் சந்திக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications