Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய தலைமுறை அலுவலகம் மீதான குண்டு வீச்சு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று மர்மநபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரியுளளார்.

Leaders of political parties condemn attack on Puthiyathalaimurai Tv office

ஸ்டாலின் எச்சரிக்கை

வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் ஸ்டாலின் சாடியிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

வைகோ கண்டனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய செயல் வன்முறை வெறியாட்டம் ஆகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தின் முன் 8-ஆம் தேதி அன்று இந்துத்துவா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தொலைக்காட்சி அலுவலரைத் தாக்கியதோடு கேமராவையும் உடைத்தனர். கடந்த மூன்று நாட்களாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினரைத் தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் தொடர்ந்துள்ளது.

ஆபத்தான போக்கு

இந்தப் பின்னணியில், இன்று அதிகாலை வெடிகுண்டு வீசி உள்ளனர். இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது. ஜனநாயகத்தின் உயிர்த்தன்மை காக்கும் ஊடகங்களையும், செய்தி ஏடுகளையும் தாக்குகின்ற வன்செயல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

பாசிச சக்திகள்

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துத்துவா சக்திகளின் பாசிச கோர முகம் அம்பலமாகிவிட்டது. இந்த வன்முறைச் செயலைப் பின்னணியில் இருந்து இயக்கும் பாசிச இந்துத்துவா சக்திகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

ஜி.கே.வாசன் கண்டனம்

இதுபோன்ற சம்பவங்கள் ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியிருக்கிறார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இதுபோன்ற நிகழ்வுகள் தொடராத வகையில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழிசை கண்டனம்

புதிய தலைமுறையின் ஊடக அலுவலகம் டீபன்பாக்ஸ் வெடி குண்டினால் தாக்கப்பட்டிருக்கிறது. வன்முறை எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.

ஆனால், அதே சமயத்தில் எங்கே எந்த தாக்குதல் நடத்தினாலும் அதை பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் மீதும் சங்க குடும்பங்கள் மீதும் பழி சுமத்துவதும், எதை எடுத்தாலும் உடனே அனைவரும் ஒரே நோக்கில் ஒரே இயக்கத்தையும், அதைச் சார்ந்த இயக்கங்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பழி சுமத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தாக்குதல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய தலைமுறை தொலைகாட்சி அலுவலக வளாகத்திற்குள் இரண்டு குண்டுகளை வீசி தாக்கியிருக்கிறார்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது இது மூன்றாவது முறை நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

வன்முறை வெறியாட்டம்

கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய நோக்கத்தோடு சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி மீதும், தொலைக்காட்சியில் பணியாற்றுகிறவர்கள் மீதும் தொடுத்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட வன்முறையாளர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

சீமான் கொதிப்பு

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் வெளியிட்டு அறிக்கையில், "ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியும், பத்திரிகையாளர்களை அடித்து மிரட்டியும் ஆவேசம் காட்டியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஆயுதங்களைத் தூக்கும் இத்தகைய அரக்கர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் உருட்டலால் ஊடகங்களைப் பணியவைக்கப் பார்க்கும் இந்த மடத்தன நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

இந்திய தவ்ஹீத் ஜமா அத் மாநிலத் தலைவர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை என்றும் முஹம்மது ஷிப்லி தெரிவித்திருக்கிறார்.

சட்ட பஞ்சாயத்து

கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை அடக்க வன்முறையை தூண்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கருத்தை, மறு கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதைவிடுத்து வன்முறை, குண்டுவீச்சில் ஈடுபடுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும் விமர்சித்திருக்கிறார். ஜனநாயகத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் காப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் பேரணி

புதிய தலைமுறை மீதான வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகள் பேரணி நடத்தினர். ஈக்காட்டுத்தாங்கலில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் உட்பட பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய தலைமுறைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+