சித்தர்காட்டில் இறந்து கிடந்த ஆடு.. மயிலாடுதுறையில் இடம்பெயர்ந்து சென்றதா சிறுத்தை? பீதியில் மக்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் நுழைந்துள்ள சிறுத்தை இடம் மாறி சென்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சித்தர்காட்டில் மர்மமான முறையில் ஆடு செத்து கிடந்த நிலையில் அதனை சிறுத்தை அடித்து கொன்றதா? என தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை சாலைகளில் உலாவியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர். கிராமத்தில் பதிவாகி இருந்த சிறுத்தையின் கால்தடத்தை வைத்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுத்தையை தேடும் பணிக்கு மொத்தம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் இரவு பகலாக மயிலாடுதுறையில் தீவிரமாக சிறுத்தையை தேடி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் சிறுத்தை தென்பட்டால் 93608 89724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 2 நாட்களாக சிறுத்தை நடமாடும் பகுதியில் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. 3வது நாளான இன்று மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை. மேலும் சிறுத்தை நடமாடும் பகுதியாக கணிக்கப்பட்டுள்ள 3 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை
இத்தகைய சூழலில் தான் சிறுத்தை ஆரோக்கியநாதபுரத்தில் இருந்து இடம் மாறி சென்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது இன்று காலையில் ஆரோக்கியநாதபுரத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தர்காடு கிராமத்தில் ஆடு ஒன்று செத்து கிடந்தது. அந்த ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுபற்றி வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது வனத்துறையினர் ஆட்டின் உடலை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். அதோடு கால்நடை மருத்துவர்களும் விரைந்துள்ளனர். இவர்கள் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றதா என்பதை உறுதி செய்ய உள்ளனர். ஒருவேளை சிறுத்தை ஆரோக்கியநாதபுரத்தில் இருந்து சித்தர்காட்டுக்கு இடம்பெயர்ந்து இருப்பது உறுதியாகும் பட்சத்தில் அங்கும் தேடும் பணி தீவிரமாக தொடங்கும். இந்த சம்பவத்தில் தற்போது சித்தர்காடு பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications