கரையாறு அருகே "உறுமல்"... வனத்தில் விடப்பட்ட சிறுத்தை மீண்டும் ஊருக்குள் வந்ததா?
நெல்லை: சமீபத்தில் நெல்லை அருகே ஊருக்குள் புகுந்து பிடிக்கப்பட்டு கரையாறு வனப்பகுதியில் விடப்பட்ட சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்ததாக செய்தி பரவி வருவதால் பொதுமக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.
நெல்லை திருமால் நகரில் கடந்த 18ம் தேதி சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று புகுந்து பொதுமக்களை பயமுறுத்தியது. இது பல வீடுகளில் புகுந்த அட்டகாசம் செய்ததால் 4 பேர் காயம் அடைந்தனர்.

5 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் கரையார் பாபநாசம் அணைக்கட்டு அருகே உள்ள கவுதலை ஆற்றுபகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
நெல்லைக்கு சிறுத்தை எப்படி வந்தது என்பது குறிதது வனத்துறையினர் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரையாறு மெயின் ரோட்டில் அதிகாலை 2 மணிக்கு சிறுத்தையின் உறுமல் சத்தத்தை அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
அதன் உறுமல் விடியும் வரை கேட்டதால் பொதுமக்கள் பயத்தில் வீடுகளை வி்ட்டு வெளியே வரவில்லை. வெளியே வேலைக்கு சென்றிருந்த உறவினர்களையம் செல்போன் மூலம் ஊருக்கு திரும்பாமல் விடிந்த பிறகு வருமாறு எச்சரிக்கை செய்தனர்.
வனத்திற்குள் பிடிக்கப்பட்டு விடப்பட்ட சிறுத்தை மீண்டும் ரோட்டுக்கு வந்து உறுமி இருக்க கூடும் என்ற பேச்சும் பலமாக எழுந்துள்ளது. திருமால் நகரை கலங்கடித்த சிறுத்தை இப்போது மலை அடிவார பகுதி மக்களின் அடிவயிற்றை கலங்கடிக்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications